கிரைம் நாவல்கள், மாத இதழ்கள், வார இதழ்கள் என பொழுதுபோக்கிற்கு படிக்கும் புத்தகங்களால் ஒரு நேரத்தில் வெறுமையை உணர ஆரம்பித்த காலகட்டத்தில் முதன் முதலில் திரு. பாலகுமாரன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது இந்த கடலோரக் குருவிகள் நாவலில்தான். இன்று வெறுமையாக உணர்ந்தால் அவர் நாவல்களைத் தேடுமளவிற்கு அவரது எழுத்திற்கு ஆளுமை உள்ளது என்பதை அவரது வாசகர்களால் உறுதியாக கூற முடியும்.
ஆரம்பத்தில் அந்தக் கதையின் ஆரம்பம் மற்றும் எழுத்து நடை, கிரைம் நாவலின் வாசகனான எனக்கு அப்பொழுது பிடிபடாதது ஆச்சரியமில்லைதான். எதோ இருக்குமென்று வலுக்கட்டாயமாக படித்து சில பக்கங்களை தாண்டிய அன்றிலிருந்து
இன்றுவரை தொடர்ந்து வாசகனாய் ஆன நான், அதற்குப் பிறகு அவருடைய பல புத்தகங்களை தேடி தேடி படித்து ஓய்வு நேரங்களில் படித்ததையே படிக்கவைத்த பெருமை எழுத்துச்சித்தரையே சாரும். இப்படி என்னைக்கவர்ந்த அனைத்து நாவல்களைப்பற்றியும் பகிர்ந்துகொள்ளும் பகுதியை நான் முதலில் படித்த கடலோரக் குருவிகள் நாவலில் இருந்து தொடங்குகிறேன்.
**********************************************
கடலோரக் குருவிகள
உழைப்பின் சுகம், வைராக்கியத்தின் அவசியம், சோம்பலை அறுப்பது, அவமானத்தை தாங்குவது என்று பல உன்னதமான விஷயங்களை பலவித கதாபாத்திரங்களின் மூலமாக நமக்கு உணர்த்த முற்ப்பட்ட முயற்ச்சியே இந்த கடலோரக்குருவிகளின் பிறப்பு என்று எண்ணுகின்றேன்.
தஞ்சையில் பிறந்து வளர்ந்து ஒரு ஏழை புரோகிதரின் மகனாகவும், தினசரி உணவிற்கு கோவிலின் பட்டை சாதத்திற்கு ஏங்கி நிற்கின்ற இந்தக் கதையின் நாயகனான மாதவன் இக்கதையின் முடிவில் அவன் வாழ்க்கையை வெற்றியோடு தொடங்குவதாக இருக்கும் கடேலாரக் குருவிகளின் கதை.
வறுமையில் போய்க்கொண்டிருக்கும் அவனது வாழ்க்கையில் ஒரு தொழிலதிபரின் மகளும் இக்கதையின் கதாநாயகியுமான மீனாட்ச்சியின் அறிமுகம் கிடைத்தபிறகு நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையை புரட்டிபோடவைப்பதாக அமையும்.இக்கதையில் வறுமையின் ஒரு பகுதியை மிகவும் ஆழமாக உணர வைத்தது திரு. பாலகுமாரனின் சிறப்பு. மீனாட்ச் மற்றும் அவளின் நண்பிகளோடு தஞ்சை சுற்றுலாவிற்கு மாதவனின் துணையோடு போவதும், அதன்பிறகு அவனின் நண்பர்களுடன் ஏற்ப்படும் பிணக்குகளும் அதன் தொடர்ச்சியாக அப்பெண்களிடம் ஏற்ப்படும் பிரச்சனைகளும் பெண்களின்மீது சிலபேர் வைத்திருக்கும் அபிப்ராயங்களை நமக்கு தெளிவாக உணர்த்தியிருப்பார் திரு. பாலகுமாரன்.
இக்கதையில் முக்கியமாக மாதவனிடம் அவன் மீனாட்ச்சிக்கு சுற்றுலாவில் உதவி செய்ததற்காக அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பணம் பிடுங்கப்பட்டு அவமானப்படுத்திய பிறகு அவன் மனதில் எழும் எண்ணங்கள் ஒரு மனிதன் தோல்வி மற்றும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவர ஒரு மிகச்சிறந்த மருந்தாக அமையும்.
மாதவன் சென்னையில் இறங்கியதும் அவனுக்கு கிடைக்கும் அதிர்ச்சி அனுபவம், பின்பு ஒரு கட்டாயத்தில் ஓட்டுனராக நிர்பந்திக்கப்பட்டு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் மனிதருடன் ஏற்ப்படும் பழக்கம் என மிகச்சுவையாக போகும் கதையில் திடீரென மீனாட்ச்சியின் குடும்ப பிரச்சனைகள், அதன் தொடர்ச்சியால் அவள் மனம் வெறுத்து மாதவனின் ஊரான தஞ்சைக்கு வந்து அவன் தந்தையிடம் வாழ்க்கைப்பாடம் கற்றுக்கொள்வதுமுதல் கதையின் முடிவுவரை பலவிதமான கதாபாத்திரங்களுடன் மிகச்சுவையாக கொண்டு சென்றிருப்பார் திரு. பாலகுமாரன்.
கடலோரக் குருவிகள் கதையில் மாதவனின் தந்தை கூறும் அறிவுரைகள் யாவும் பலரை பக்குவப்படவைக்கும். நமக்கு தோன்றும் கேள்விகள் அனைத்தும் இந்தக்கதையில் மாதவன் பாத்திரத்தில் கேட்கவிட்டு அவனின் தந்தை பாத்திரம் மூலமாக நமக்கு பல அறிவுரைகள் வழங்கியிருப்பார் எழுத்துச்சித்தர் அவர்கள்.
எழுத்தின் மூலமாக எண்ணங்களை சீரமைக்க முயற்சி செய்யும் திரு. பாலகுமாரனின் எழுத்துக்கள் யாவும் அவரது வாசகர்களுக்கு எப்பொழுதும் பொக்கிஷங்களே.
மீண்டும் சந்திப்போம். நன்றி.
அன்புடன்
ஜெயகாந்தன்.
0 comments:
Post a Comment